10 ஆண்டுகளுக்கு முன்பு, ஜாதி, மத அடிப்படையில் தேர்தல்கள் நடந்தன. பிரதமர் மோடி அரசியலின் வரலாறு மற்றும் கலாசாரத்தை மாற்றியுள்ளார். தேச விரோதிகள் மற்றும் நாட்டை பலவீனப்படுத்துபவர்களுக்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எப்போதும் ஆதரவாக நிற்கின்றன என்று பாஜக தேசியத்தலைவர் ஜெ.பி நட்டா பேசியுள்ளார்.
லோக்சபா தேர்தலின் இரண்டாம் கட்டத்தை முன்னிட்டு பீகாரின் மதுபானியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட நட்டா, ‘2008ம் ஆண்டு பாட்லா ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த என்கவுன்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்காக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஏன் அழுதார்?’ என கேள்வி எழுப்பி உள்ளார்.
செப்டம்பர் 19, 2008 அன்று, பாட்லாவில் பதுங்கியிருந்த இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாதிகளை கைது செய்ய டெல்லி போலீஸ் நடவடிக்கையை மேற்கொண்டது, அதில் டெல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் சந்திர சர்மா மற்றும் இரண்டு இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் அதிஃப் மற்றும் சஜித் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
“பாட்லா என்கவுன்டரின் போது கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்காக சோனியா காந்தி அழுததாக அவர்களின் (காங்கிரஸ்) தலைவர்கள் கூறினார்கள். அவர் பயங்கரவாதிகளுக்காக அழ வேண்டிய அவசியம் என்ன ? பயங்கரவாதிகளுக்கும் சோனியாவுக்கு என்ன தொடர்பு? அவர்கள் மீது சோனியாவிற்கு அனுதாபம் ஏற்படுவதற்கான காரணம் என்ன ? இதன் பின்னணி என்ன?. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். என்று நட்டா பேசியிருந்தார்.