திமுக அதிகார துஷ்பிரயோகம்- அண்ணாமலை கண்டனம்!

0
461

பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பவதாது;

தமிழக அரசின் குற்ற வழக்குகள் துறை இயக்குனராக, முதல்வர் முக ஸ்டாலினின் நெருக்கமானவரான, ஹாசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டிருக்கிறார். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, திமுக இளைஞரணி துணைச் செயலாளர் பதவியில் இருந்த அவரை, திமுக ஆட்சிக்கு வந்தவுடன், தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக நியமித்தனர். தற்போது மூன்று ஆண்டுகள் கடந்ததும், அவரை துறை இயக்குனராக நியமித்திருக்கிறார்கள்.

ஹாசன் முகமது ஜின்னாவை இந்தப் பதவியில் அமர வைக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த ஆறு மாதங்களாக தமிழக அரசின் குற்ற வழக்குகள் துறை இயக்குனர் பதவிக்கு யாரையும் நியமிக்காமல் இருந்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

தமிழகத்தில் எத்தனையோ திறமை வாய்ந்த மூத்த வழக்கறிஞர்கள், குற்ற வழக்குகள் துறை இணை/துணை இயக்குனர்கள் எனத் தகுதி வாய்ந்தவர்கள் இருக்கும்போது, ஒட்டு மொத்த குற்ற வழக்குகள் துறையின் தலைவர் பொறுப்புக்கு, தங்களுக்கு நெருக்கமானவர் என்ற ஒரே காரணத்துக்காக அரசுப் பதவி வழங்கியிருப்பது, முற்றிலும் திமுகவின் அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.

தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பதும், பல குற்றங்களில் திமுகவினருக்கு நேரடித் தொடர்பு இருப்பதும் வெளிப்படையாகத் தெரிய வரும் நிலையில், மாநிலத்தின் ஒட்டு மொத்த குற்ற வழக்குகளைக் கையாளும் முக்கியப் பொறுப்பில், மூன்று ஆண்டுகள் முன்பு வரை திமுக இளைஞரணித் துணைச் செயலாளராக இருந்த ஒருவரை நியமித்திருப்பது, திமுகவின் நோக்கம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின், தனக்கு நெருக்கமானவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டுமென்றால், அவரது கட்சியில் முக்கியப் பதவிகள் கொடுக்கலாம். அதை விடுத்து, பொறுப்பு மிக்க அரசுப் பதவிகளில், இது போன்ற அதிகார துஷ்பிரயோகம் செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here