நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஒட்டு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நேற்று முன்தினம் (10-07-2024) நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஸ்ட்ராங் ரூமில் வைத்து சீல் வைக்கப்பட்டது.
அதை் தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் பழனி நிருபர்களிடம் கூறியதாவது: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை 13ல் நடைபெற இருப்பதையொட்டி, அனைத்து முன்னேற்பாடுகளும் முடிந்து தயார் நிலையில் உள்ளது.
ஓட்டு எண்ணும் மையத்திற்கு துணை ராணுவ படை, சிறப்பு காவல் படை, போலீசார் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுழற்சி முறையில், ஒரு நாளைக்கு 150 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இருபது சுற்றுகளாக ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணும் மையம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.